திறந்திருந்தது
என் புத்தகம்
தாண்டிச் சென்றவர்கள்
நின்று வாசித்தார்கள்.
வழமைபோல – சில
பக்கங்கள் களவாடப்பட்டன
இருந்தும்
சுவாரசியம் குறையவில்லை
தொடர்ந்தும் வாசித்தார்கள்.
சிலர் அழுதார்கள்
சிலர் சிரித்தார்கள்
சிலர் ஏதேதோ பேசினார்கள்
எல்லாவற்றையும் கேட்டும்
திறந்துதானிருந்தது புத்தகம.;
காற்று சில பக்கங்களை
திறந்து விட்டிருந்தது
கைகள் திருப்பிய பக்கங்களுக்கும்
காற்று திருப்பிய பக்கங்களுக்கும்
வித்தியாசம் இருந்தன.
எங்கிருந்தோ தாழப்பறந்து
வந்த பறவை
எச்சம் போட்டுப் பறந்தது
பறவையை துரத்தி வந்த
நாயொன்று
புத்தகத்தை கௌவிச் சென்றது.
-----------------------------------
மாதுமை
------------------
No comments:
Post a Comment